சினிமா செய்திகள்

காந்தா திரைப்படம் வெளியிட தடை கோரி மனு- துல்கர் சல்மான் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

காந்தா படம் எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மாலை மலர்

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் காந்தா திரைப்படத்துக்கு தடை கோரி பாகவதரின் மகள் வழி பேரன் மனு அளித்துள்ளார். பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள காந்தா படத்தை, எடுப்பதற்கு முன் அவரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என பாகவதரின் மகள் வழி பேரன் மனு அளித்துள்ளார்.

இந்த மனுவிற்கு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.