தேனி மாவட்டத்தில் ஒரு மலைவாழ் கிராமத்தில் எழுத்தறிவு இல்லாத மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகிறார்கள். இதில் ஆரவ் - ரம்யா பாண்டியன் தம்பதியின் மகளான கிருத்திகா, எப்படியாவது படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
பருவம் எய்தியதும் அவளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்கிறார்கள். ஆனால் தான் கல்வி கற்க வேண்டும், தனது கிராமத்துக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்ற ஆசையில் கிராமத்தை விட்டு வெளியேறி, மாவட்ட கலெக்டரான அருள்நிதியை பார்த்து உதவி கேட்க செல்கிறாள்.
மிருகங்களுக்கே பயப்படாத சிறுமி கிருத்திகாவுக்கு, நகரத்தில் மனிதர்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில் அருள்நிதியை சந்திக்கும் கிருத்திகா, தனது விருப்பத்தை சொல்கிறாள்.
கிருத்திகாவின் ஆசையை நிறைவேற்ற அந்த கிராமத்துக்கு செல்லும் அருள்நிதி, அங்கு பள்ளிக்கூடம் அமைக்க முயற்சி செய்கிறார். ஆபத்தான அந்த மலைப்பகுதிக்கு ஆசிரியர்கள் யாரும் பாடம் நடத்த முன்வராததால் சிக்கல் ஏற்படுகிறது. கிருத்திகாவின் ஆசையை அருள்நிதி நிறைவேற்றினாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
நேர்மையான கலெக்டராக படம் முழுக்க அழுத்தமான நடிப்பால் கவர்கிறார், அருள்நிதி. அமைதியான அவரது நடிப்பு கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறது.
பழங்குடியின தம்பதியாக ஆரவ், ரம்யா பாண்டியன் கவனிக்க வைக்கிறார்கள். ஆங்காங்கே அழகான காதலையும் வெளிப்படுத்துகிறார்கள்.
சிறுமி கிருத்திகா நடிப்பில் வெகுவாகவே 'ஸ்கோர்' செய்துள்ளார். 'எமோஷனல்' காட்சிகளில் அழ வைத்திருக்கும் கிருத்திகா, நிச்சயம் பெரிய ஆளாக வருவார்.
காளி வெங்கட், வி.டி.வி.கணேஷிடம் இன்னும் எதிர்பார்த்தோம். ஜான் விஜய் இன்னும் மிரட்டி இருக்கலாம்.
எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாசின் இசையும் படத்துடன் பயணிக்க வைக்கிறது.
எதார்த்தம் தெறிக்கும் காட்சிகள் படத்துக்கு பலம். முதல் பாதி மெதுவாக நகருகிறது. சில காட்சிகளை யூகிக்க முடிகிறது.
ஆசியாவின் பழமையான மொழியான 'காடர்' மொழியை தெரியப்படுத்தி, பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்கான போராட்டத்தை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி கவனிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் கணேஷ் விநாயகன்.
அருள்வான் - கிடைக்கட்டும்.