தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி பணமோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் அப்ரூவராக (சாட்சியாக) மாற விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டெல்லி நீதிமன்றத்தில் தனது விருப்பத்தை தெரிவிக்க, நீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு முறைப்படி கோரிக்கை விடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
பின்னர் அமலாக்கத்துறை அவரது வாக்குமூலத்தைப் பதிவுசெய்து, அவரை அரசுத் தரப்பு சாட்சியாளராக ஆக்குவதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதா, வேண்டாமா என முடிவு செய்யும். இந்த வழக்கில் ஜாக்குலினுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்த நிலையில், ஜாக்குலினின் இந்த மனமாற்றம் நிகழ்ந்துள்ளது.
நடிகை ஜாக்குலினின் காதலர் எனக்கூறப்படும் தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி தொழிலதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து, அரசு உயர் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணத்தை மிரட்டிப் பறித்ததாக அவர் மீது அமலாக்கத்துறை மற்றும் டெல்லி போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதனிடையே இந்த பணமோசடி வழக்கில் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். சுகேஷ் தனக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த பரிசுகளை வழங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது அவர் அரசு தரப்பு சாட்சியாக மாற முன்வந்துள்ளார்.
இந்த வழக்கில் ஜாக்குலின் அப்ரூவராக மாறுவது, சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.