முதலமைச்சர் விஜய்யின் பொறுப்புணர்ச்சியை பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கிறது என நடிகர் யாஷ் கூறியுள்ளார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் நாளை திரைக்கு வர இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமாகுரேஷி, ருக்மினி வசந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் யாஷ் பேசியதாவது:-
தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் எனக்கு நிறைய அன்பை கொடுத்து வருகிறார்கள். சினிமா என்றால் தமிழ், கன்னடம், தெலுங்கு என்று இல்லை. அது இந்திய சினிமாதான். ‘டாக்ஸிக்’ படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.
முதலமைச்சர் விஜய் எல்லோரையும் கவரக்கூடிய மனிதர். தமிழக மக்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். விஜய் மீது உள்ள பாசத்தை தேர்தல் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். அவரும் மக்கள் மீது உள்ள பாசத்தை முதலமைச்சராக அவர் செய்யும் கடமைகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார். முதலமைச்சர் விஜய்யின் பொறுப்புணர்ச்சியை பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கிறது.
மக்களுக்கான பணியினை நல்ல முறையில் செய்து கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் முதலமைச்சர் விஜய் காலை முதல் இரவு வரை மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என அடிக்கடி சொல்வார். இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் விஜய் மீது மக்கள் வைத்திருந்த அன்பை நாம் திருப்பி கொடுக்க வேண்டும். விஜய்க்கு அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. விஜய் முதலமைச்சராக கிடைத்ததற்கு நாம் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எப்பவும் உள்ள அரசியல் இல்லாமல் புதுவிதமான அரசியல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும் போது நமக்கு ரொம்ப மகிழ்ச்சி வருகிறது.
எல்லோருக்குமே தெரியும் இந்த தேர்தல் வெளிப்படையான தேர்தலாக நடந்தது.
தமிழக தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் முதலமைச்சர் விஜய்க்கு எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. விஜய்க்கும் அதற்குரிய அனைத்து தகுதியும் இருக்கிறது. இந்த அரசியலை பார்த்து உலக அரசியலும் மாற வேண்டும். தமிழக மக்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.