சினிமா பயணத்தில் சந்தித்த சவால்கள் மற்றும் தயாரிப்புச் சிக்கல்கள் காரணமாகத் தாம் கடந்த 14 மாதங்களாகப் படங்களில் நடிக்க முடியாமல் வீட்டில் முடங்கியிருந்ததாகவும், அந்த இக்கட்டான காலகட்டத்தில் தனக்குத் தொடர்ந்து நம்பிக்கையும் ஊக்கமும் அளித்தது தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா என நடிகர் விஷால் உருக்கமாகப் பேசியுள்ளார். திரையுலக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஷால், தனது சினிமா வாழ்க்கை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.
திரைப்படத் தயாரிப்பில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள், வழக்குகள் மற்றும் தொழில்ரீதியான முடக்கங்கள் காரணமாகக் கடந்த 14 மாதங்களாகத் தன்னால் எந்தவொரு புதிய திரைப்படத்திலும் நடிக்க இயலவில்லை என்று விஷால் சுட்டிக்காட்டினார். திரைத்துறை வாழ்வில் இது மிகவும் மன உளைச்சலைத் தந்த காலகட்டமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
வீட்டில் முடங்கியிருந்த அந்தச் சோதனையான சூழலில், "மீண்டும் பழைய வேகத்துடன் களமிறங்க முடியும்" என்ற எண்ணத்தையும் தன்னம்பிக்கையையும் விதைத்து, தொடர்ந்து ஊக்கமளித்தவர் எனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா விஷால் தெரிவித்தார். மேலும், அவர் இல்லையென்றால் இவ்வளவு பாசிட்டிவாக உங்கள் முன் என்னால் நின்றிருக்க முடியாது என கூறி சாய் தன்ஷிகாவுக்கு தனது நன்றியை விஷால் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்.
நடிகராக மட்டுமின்றி, திரைப்படங்களை இயக்கும் புதிய பயணத்திலும் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி வரும் ‘மகுடம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இப்பேச்சு சினிமா வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சினிமாவில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து மீண்டு வந்துள்ள விஷாலின் இந்த நேர்மையான பேச்சு, அவரது ரசிகர்களாலும் திரையுலகப் பிரபலங்களாலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. தடைகளைத் தாண்டி அவர் மீண்டும் முழு வீச்சில் களமிறங்குவது அவரது திரைப்பயணத்திற்குப் புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.