சினிமா செய்திகள்

மனைவியோடு வந்து கருப்பன் தரிசனம் செய்த நடிகர் சூர்யா

கருப்பு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாமி தரிசனம் செய்தார் சூர்யா.

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் கருப்பு. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், கருப்பு திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது.

பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு வெளியான நிலையில், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா கருப்பு படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளருக்கு சொகுசு கார் பரிசளித்தார். இந்த நிலையில், கருப்பு திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து மதுரையில் உள்ள அழகர் கோவிலின் காவல் தெய்வமான 18-ஆம் படி கருப்பண சாமியை தரிசனம் செய்தார்.

நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகாவோடு 18-ஆம் படி கருப்பண சுவாமியை தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. கருப்பு திரைப்படத்தில் கருப்பண சாமி குறித்த காட்சிகள் இடம்பெற்ற நிலையில், நடிகர் சூர்யா தற்போது புகழ்பெற்ற கருப்பணசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.