இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். சமூகக் கருத்துக்கள், நவீனத் தொழில்நுட்பம் மற்றும் பிரம்மாண்டக் காட்சிகளைத் தனது திரைப்படங்களில் புகுத்துவதில் உலகளவில் புகழ்பெற்றவர்.
இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் திரைக்கதை எழுத்தாளராகவும், உதவி இயக்குநராகவும் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய சங்கர் ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ உள்ளிட்ட பல படங்களை இயக்கியதுடன் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான எஸ்.பிக்சர்ஸ் மூலம் 'காதல்', 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி', மற்றும் 'ஈரம்' போன்ற தரமான சிறு பட்ஜெட் படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான ‘கேம் சேஞ்சர்’ கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து ஷங்கர் அடுத்து யாரை வைத்து எந்த மாதிரியான கதையுடன் இயக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான 'வேள்பாரி'யை ஒரு திரைப்படமாகத் தழுவி எடுக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேள்பாரியின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என கூறப்பட்டாலும், அந்தக் கதாபாத்திரத்திற்கு தனது தேர்வு சூர்யா தான். அவர் அதற்கு மிகச் சரியான பொருத்தமாக இருப்பார் என ஷங்கர் கருதுவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சமீபத்தில், சூர்யா 'கருப்பு' படத்தில் நடித்திருந்தார். அதில் அவர் கருப்புசாமி எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரமும், தோற்றமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இயக்குநர் ஷங்கரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.