சினிமா செய்திகள்

"ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படைப்பு" மண்டாடி படத்தை பாராட்டித்தள்ளிய நடிகர் சரத்குமார்

மண்டாடி திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் "மண்டாடி".

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில், நடிகர் சரத்குமார் மண்டாடி படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தப் படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு என ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.

கடலிலேயே எடுக்கப்பட்ட படம்:

அந்தப் பதிவில், "மண்டாடி திரைப்படத்தைப் பார்த்த பிறகு வார்த்தைகளே வரவில்லை. இந்திய திரையுலகில் இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு துணிச்சலான படைப்பு இது; கேட்பதற்கு மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை.

முழுவதுமாக கடலிலேயே படமாக்கப்பட்ட இப்படம், பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளையும், கடலில் உள்ள சவால்களை எதிர்கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது.

மனித விழுமியங்கள், அன்பு மற்றும் தியாகங்கள் கலந்த ஒரு எளிய பாய்மர படகு பந்தயமாக தொடங்கி, பல உணர்வுப்பூர்வமான பரிமாணங்களை கொண்ட படமாக இது அமைகிறது.

கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியுள்ளார்:

முழு குழுவினருக்கும், குறிப்பாக இத்திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டு சிறப்பாக இயக்கிய இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கும் எனது வாழ்த்துகள்.

நடிகர் சூரி இக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்; சிறந்த கதையை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவருக்கு மற்ற நடிகர்களின் சிறப்பான ஒத்துழைப்பும், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

ஆஸ்கர் விருதுக்கு தகுதியான இப்படைப்பை உருவாக்குவதில் துணிச்சலையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்திய தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் பாராட்டுகள்," என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT