குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோ மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகர் மகேந்திரன். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி அதிக வைரலாகி, இவர் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் மகேந்திரன் தன்னைப்பற்றி வைரலாகும் வீடியோ மற்றும் அதல் தான் தெரிவிக்க விரும்பிய கருத்துக்கள் என்ன என்பதை விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், "அனைவருக்கும் வணக்கம், சமீபத்தில் நான் கொடுத்த நேர்காணலில் குறிப்பிட்ட பகுதி அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது. இன்ஸ்டாகிராம், டுவிட்டர் மற்றும் யூடியூப் தளங்களில் சில விஷயங்களை பார்த்த போது எனக்கு சோகமாக இருந்தது. நான் அதிகம் நேசிக்கும், மதிப்பளிக்கும் சிலர் உள்பட பலரும் என்னைப் பற்றி பேசியிருக்கிறார்கள். ஒரு நொடி சிந்தித்து இருந்தால் கூட, மகேந்திரன் இப்படி சொல்லக்கூடியவர் இல்லை அவர் சொல்ல வந்தது இதுதான் என்று கூறியிருக்கலாம். அவர்கள் அப்படி சொல்லவில்லை, பரவாயில்லை. நான் பேசிய விஷயம் என்பதால் நானே இதற்கு சிறு விளக்கம் அளிக்கிறேன்.
கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா என்கிறார்கள்? நான் கேள்வி கேட்டது வெகு சிலரைத் தான். பிறகு நான் ஆறு மாதம் அவகாசம் கொடுங்கள் என்று கூறியிருந்தேன். அதுவரை நீங்கள் கேள்வி கேட்க வேண்டாம் என்று நான் கூறினேன். அதற்கு காரணம் என்னவென்றால், அண்ணன் ஆட்சிக்கு வரும்போது எனக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுங்கள், நான் நிச்சயம் நல்லாட்சியை கொடுப்பேன் என்று சொன்னார். அவர் மீது இருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கையில் தான் நான், அவகாசம் கொடுங்கள் கேள்வி மட்டும் கேட்காதீர்கள் என்று கூறியிருந்தேன். அதுவும் வெகு சிலரைத்தான், பொது மக்களிடம் அப்படி சொல்லவில்லை.
பிறகு சோலார் சிஸ்டம் என்ற வார்த்தை கூறினேன். ஆம் அது தவறுதான். அது வார்த்தை பிழை தான், நான் மிகவும் சுமாராக படிக்கக்கூடியவன். நான் அதிகம் சிரமப்பட்டு 10-ஆவது தேர்ச்சி பெற்று அதன் பிறகு +1, +2 என்று முடியாமல் திரும்ப வந்தவன். நான் மிகவும் சுமாரான மாணவன் தான். அந்த இடத்தில் நான் சோலார் எனர்ஜி, சோலார் பவர், சோலார் பேனல் என எதை வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். அங்கு என்னால் சரியாக சொல்ல முடியாமல் போனது.
அங்கு நான் சொல்ல வந்ததை இப்போது சொல்லிவிடுகிறேன். 2015-ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கொச்சின் சர்வதேச விமான நிலையம் முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்குவதை போல் வடவமைத்து இருந்தார்கள். அந்த விமான நிலையம் முழுக்க சூர்ய சக்தியால் மட்டுமே இயங்கும். அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் நம் தமிழ்நாட்டில் அதுபோன்ற அமைப்பு இல்லை என்று யோசித்து இருக்கிறேன். அதன்பிறகு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டின் மீது சூர்ய தகடுகளை பொருத்தும் திட்டத்தை அறிவித்தார்கள். நேரடி சூர்ய சக்தியால் கிடைக்கும் மின்சாரம் நம் மக்களுக்கு ஓரளவுக்கு பயன்தரும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
நான் பேசியதில் நிறைய விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டன. அப்புறம் மகேந்திரனுக்கு அதிக திமிர் இருக்கிறது என்றும் கூறினார்கள். சிறுவயதில் இருந்தே எனக்கு திமிர் அதிகம், ஒரு இயக்குநரிடம் கால் மீது கால் போட்டு பேசுவது, கேள்வி கேட்பது என்று கூறினார்கள். அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை. என்னை பற்றி பேசியவரிடம் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். அதற்கு அவர் விளையாட்டாக பேசினேன் என்றார்
மேலும், மக்கள் கஷ்டத்தை பார்த்து மகேந்திரன் சிரிக்கிறான் என்று கூறுகிறார்கள். தயவு செய்து எனக்கு அப்படியொரு பட்டத்தை கொடுக்காதீர்கள். இன்று நான் உண்ணும் ஒருவேளை உணவும் அதற்கான காரணமும் இந்த மக்கள் தான். இவ்வளவு முக்கியமான மக்களை நான் எப்போதம் அப்படி நினைக்க மாட்டேன். என்னுடன் பணியாற்றியவர்கள், என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். எனக்கு இந்த மாதிரி தவறான பெயரை கொடுத்துவிடாதீர்கள். நான் சரியாக நடிக்கவில்லை, என் திரைப்படங்கள் நன்றாக இல்லையென்றால் அதை சொல்லுங்கள். நான் அவற்றை சரி செய்து கொள்கிறேன்.
இதைத் தாண்டி என் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தாதீர்கள். இதுபோல் தவறான விஷங்கள் பரவி மக்கள் கஷ்டப்பட்டு இருந்தால் நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். வேண்டுமென்றால் மன்னிப்பும்கூட கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய இக்கட்டான சூழலில் என்னை தொடர்பு கொண்டு எனக்காக பேசிய அனைவருக்கும் என் மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.