தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருவதன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார்.
அந்த வகையில், தற்போது ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபாஸுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து ஜிதின் குலாட்டி, பிரத்யேக பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பிரபாஸ் மிகவும் தாராளமானவர் என்றும், சிறந்த மனிதர் என்றும் தான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவருடன் நேரடியாகப் பணியாற்றத் தொடங்கிய பிறகு அந்த வார்த்தைகள் உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாகவும் ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் எப்போதும் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருக்கும் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர். அவர் மிகவும் இனிமையானவர், தாராளமானவர். யார் உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடன் படப்பிடிப்பில் இருக்கிறேன். அவரைச் சுற்றியுள்ள பலருக்கு அவர் உதவுவதை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்" என்றார்.
மேலும், பிரபாஸின் எளிமை மற்றும் தாராள மனப்பான்மை மட்டுமின்றி, அவரது வீட்டில் தயாரிக்கப்படும் உணவையும் சுவைத்துள்ளதாக ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பிரபாஸ் வீட்டிலிருந்து வந்த மட்டன் குறித்து பேசிய அவர், “பிரபாஸ் வீட்டில் சமைக்கும் உணவுக்காகவும் பிரபலமானவர். அவரது வீட்டில் சமைத்த உணவை நானும் சாப்பிட்டிருக்கிறேன்.
குறிப்பாக அந்த மட்டன், நான் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்தது. இதை நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அனுபவித்து சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் மற்றும் ஜிதின் குலாட்டி இணைந்து நடித்து வரும் ‘ஃபௌசி’ திரைப்படம் மீதும் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிரம்மாண்டமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படம், பிரபாஸின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ‘சலார்’, ‘கல்கி 2898 AD’, ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வரும் பிரபாஸ், தனது படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், அவருடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய ஜிதின் குலாட்டி, அவரது நட்சத்திர அந்தஸ்தை மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் அவரது மனிதநேயத்தையும் பாராட்டியிருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.