தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெயமணி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு சின்னத்திரை வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட ஜெயமணி மேடை நாடகங்கள் வாயிலாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். இருப்பினும் ‘திருமதி செல்வம்’ தொடரில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் வி.சி.ஜெயமணி. அதனை தொடர்ந்து மெட்டி ஒலி, கல்யாணப் பரிசு உள்ளிட்ட பல தொடர்களில் வந்து வந்த ஜெயமணி தற்போது ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் நடித்து உள்ளார். மேலும் அவர் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜெயமணி நடிப்பை தாண்டி சுமார் 40 தொடர்களில் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.
மேலும் ஜெயமணி நடிகர், இயக்குநரை தாண்டி, நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியன் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதேபோல் ஜெயமணியின் மனைவி மாலதி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். இவர்களின் மகள் நந்தினி டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் ஜெயமணி திடீரென மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.