சினிமா

யவனராணி ஸ்ரீதேவிக்கு இரங்கல் - சிம்புதேவன்

ஸ்ரீதேவி இயக்குனருக்கான நடிகை. அவரை நாங்கள் இந்தியாவின் நிரந்தர ராணி என்று அறிவித்தோம் என்று தமிழில் ஸ்ரீதேவி கடைசியாக நடித்த படத்தை இயக்கிய இயக்குநர் சிம்புதேவன் இரங்கல் தெரிவித்துள்ளார். #Sridevi #RIPSridevi

மாலை மலர்

பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தமிழ்பட இயக்குநர் சிம்புதேவன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழில் சிம்பு தேவன் இயக்கிய `புலி' படத்தில் தான் ஸ்ரீதேவி கடைசியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிம்புதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

அவர் மிக அற்புதமான நடிகை. முதன் முதலில் அவருக்கு கதை சொல்ல மும்பையில் சந்தித்த போது அந்த கதாபாத்திரத்துக்குள் அவர் ஒன்றிப்போன விதம் ரொம்பவும் பிடித்தது. புலி படத்தில் யவனராணி கதாபாத்திரத்தை மிக அற்புதமாக கொடுத்திருந்தார். 7.30 மணிக்கு ஷுட்டிங் என்றால் அதே நேரத்தில் முழு மேக்கப்புடன் தயாராக இருப்பார். அவரது கண்ணில் லென்ஸ் வைத்ததில் அவரது கண்ணில் தொடர்ந்து தண்ணீர் போய் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்தார்.

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் கயிறு கட்டி பயிற்சி எடுத்து இந்த வயதிலும் சிறப்பாக நடித்தார். அவர் இயக்குனருக்கான நடிகை. அவரை நாங்கள் இந்தியாவின் நிரந்தர ராணி என்று அறிவித்தோம். புலி ரொம்ப பிடித்த படம், பிடித்த கேரக்டர் என்று பாராட்டினார். அவரது இழப்பு அதிர்ச்சியாகவும், மிக வருத்தமாகவும் இருக்கிறது.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #Sridevi #RIPSridevi