சினிமா

மதுரை ஐகோர்ட்டில் ‘தீரன்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

“தீரன்” படத்துக்கு இடைக்கால தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மதுரையைச் சேர்ந்தவர் பசும்பொன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் “தீரன்” படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தவறாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளனர்.

இது அந்த குடும்பத்தினருக்கு எதிரான நடவடிக்கையாகும். எனவே “தீரன்” படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது “தீரன்” படம் தொடர்பாக மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு தொடர்பாக ஆய்வு செய்ய 2 வக்கீல்கள் அடங்கிய கமி‌ஷன் அமைக்க வேண்டும்.

அவர்கள் சினிமா பார்க்க சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு ஆகும் செலவை மனுதாரர் ஏற்பாரா? என்பதை கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.

மனுதாரர் செலவுத் தொகையை ஏற்றால் அவரது கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று வழக்கை ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT