சினிமா

ஓடும் காரில் பாலியல் தொல்லை: நடிகை பாவனாவிடம் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ரகசிய விசாரணை

ஓடும் காரில் பாலியல் தொல்லை செய்யப்பட்ட நடிகை பாவனாவிடம் போலீஸ் ஏ.டி.ஜி.பி. மீண்டும் ரகசிய விசாரணை நடத்துகிறார்.

மாலை மலர்

இது தொடர்பாக கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை பாவனாவின் முன்னாள் டிரைவர் மார்ட்டின் உள்பட 4 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

பாவனா கடத்தல் விவகாரத்தில் மலையாள திரையுலக பிரபலங்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது. ஆனால் இதற்கு தகுந்த சாட்சியங்கள் இல்லாததால், புகார்களின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்ட பல்சர் சுனிலுடன் ஒரே அறையில் தங்கியிருந்த ஜின்சன் என்ற கைதியுடன் பல்சர் சுனில் நட்பாக பழகினார். நட்பு நெருக்கமானதும் ஜின்சனிடம், பல்சர் சுனில் சகஜமாக பேசினார்.

அப்போது நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை குறித்த சம்பவத்தில் வெளிவராத பல ரகசிய தகவல்களை ஜின்சனிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

பல்சர் சுனில் தெரிவித்த தகவல்களை ஜின்சன், ஜெயில் அதிகாரிகளிடம் கூறிவிட்டார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதனை போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கூறினர்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த பெண் ஏடிஜிபி சந்தியா, இது தொடர்பான சில தகவல்களை அறிய விரும்பினார். இதற்காக நடிகை பாவனாவை நேற்று ஆலுவாவில் உள்ள போலீஸ் கிளப்புக்கு வரவழைத்து அவரிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டார்.

அப்போது பாவனா, இச்சம்பவம் பற்றி சில முக்கிய தகவல்களை ஏடிஜிபி சந்தியாவிடம் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலும், ஜெயிலுக்குள் நண்பனிடம் பல்சர் சுனில் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் இந்த வழக்கை புதிய கோணத்தில் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.