அரவிந்த் சாமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. சித்திக் இயக்கியுள்ள இப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். இப்படம் மே 11ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து அரவிந்த் சாமி கூறும்போது, ‘இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகியுள்ளது. அதில் சில மாற்றங்கள் செய்து தமிழில் படம் உருவாகி இருக்கிறது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தேன். அப்படத்தை தொடர்ந்து அந்த கதாபாத்திரம் போல் 15 படங்கள் வந்தது. ஆனால், நான் நடிக்க வில்லை.
ஹீரோ, வில்லன் என்று இல்லாமல், நல்ல கதாபாத்திரம் அமைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான். அதில் நடிக்க மாட்டேன். பார்க்கவும் மாட்டேன். பேய் இருக்கா, இல்லையா என்ற கேள்விக்கு முதலில் மனிதர்கள் இருக்கிறார்களா? முதலில் நல்ல மனிதரை தேடுவோம். அதன் பின் பேய்யை இருக்கா இல்லையா என்று தேடுவோம். அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது’ என்றார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் பேசும்போது, ‘மற்ற ஹீரோக்கள் போல் அரவிந்த் சாமி கிடையாது. மற்ற நடிகர்கள் படத்தில் நடித்து முடித்து விட்டால், தன்னுடைய வேலை முடிந்தது என்று நினைப்பார்கள். ஆனால், அரவிந்த் சாமி, படத்தின் பின்னணி வேலைகள் நடக்கும்போது எப்போது முடியும் என்று மிகவும் ஆர்வமாக தெரிந்துக் கொண்டு இப்படம் வெளிவருவதற்கு பெரும் உதவி செய்து வருகிறார்’ என்றார்.