சினிமா

சினிமாத் தனமாக எதையும் செய்யவில்லை - அருள்நிதி

வருகிற 11-ந் தேதி திரைக்கு வரும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் சினிமாத் தனமாக இருக்காது என்றும், எனது படத்தை மக்கள் குடும்பத்துடன் ரசிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே படத்தில் நடிப்பதாகவும் அருள்நிதி கூறினார். #Arulnidhi #IAK

மாலை மலர்

அருள்நிதி நடிப்பில் வருகிற 11-ந் தேதி திரைக்கு வரும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. இதில் நடித்த அனுபவம் பற்றி அருள்நிதி கூறுகிறார்...

“நான் வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறேன். இது எனது 10-வது படம். என் படத்தை அனைவரும் குடும்பத்தோடு ரசிக்க வேண்டும். அதற்கு நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் தொடர்ந்து ரசிகர்கள் மனதில் இருக்க வேண்டும்.

கால்டாக்சி டிரைவர் ஒருவர் பிரச்சினையில் மாட்டுகிறார். அதிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்பது தான் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் கதை. இதில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் இருக்கும். பாடல்களும் யதார்த்தமாக இருக்கும். சினிமாத் தனமாக எதையும் செய்யவில்லை. தலைப்புக்கு ஏற்ப இரவு நேரத்தில் அதிகமாக படமாக்கினோம்.

இது நாம் அடிக்கடி கேள்விப்படும் சம்பவங்களை சேர்த்து விறுவிறுப்பாக, மு.மாறன் இதை இயக்கி இருக்கிறார். ஒருநாள் இரவில் நடக்கும் கதை. ஆக்‌ஷன் திரில்லராக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் அஜ்மல் பாத்திரம் பேசப்படும். அவருக்கும் எனக்கும் ஒரு சண்டை காட்சி இருக்கிறது. அதை மிகவும் ரசித்து கஷ்டப்பட்டு நடித்தோம். நாயகி மகிமா நம்பியார் நர்சாக வருகிறார். படத்தின் காட்சிகளும், வசனங்களும் அருமையாக அமைந்துள்ளன.

அடுத்து கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி என்னும் நான்’ என்ற படத்தில் நடிக்கிறேன். இது அரசியல் கலந்த படம்”. #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal