சினிமா

பூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0' - படக்குழுவில் இணைந்த பிரபலங்கள்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ்படம் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் பூஜையுடன் தொடங்கியிருக்கிறது.

மாலை மலர்

ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்குவதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாகி இருக்கிறது. அதற்கேற்றார் போல் வெற்றி பெற்ற பல்வேறு படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகிறது. 

அந்த வகையில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது. 

இந்நிலையில், `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் தமிழ் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக இயக்குநர் அமுதன் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், அந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. 

முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவாவே இந்த பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மேலும் முதல் பாகத்தில் சிவா ஜோடியாக நடித்த திஷா பாண்டே இந்த பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். 

சமீபத்தில் வெளியாகி வசூலை அள்ளிய `விக்ரம் வேதா' படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரிக்கிறார்.