சினிமா

பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி

பல படங்களில் பிசியாக நடித்து வரும் அமலாபால், பார்வையற்றவர்களுக்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.

மாலை மலர்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். கஷ்டப்படும் மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டும் இவர் தற்பொழுது 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியை திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது.

இது குறித்து நடிகை அமலா பால் கூறும்போது, ''அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடை பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுதுதான் சில முக்கியமான புள்ளி விவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70 சதவிகிதம் கார்னஸ் டிரன்ஸ்ப்ளண்ட் (Cornes Transplant) மற்றும் கண்புரை (Cataract) போன்ற அறுவை சிகிச்சைகளால் குணப்படுத்தப்படக்கூடியவை. இதற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கியமான விஷயம் போதிய கண்தானம் இல்லாதது தான். தற்பொழுதுள்ள நிலையில் வருடத்திற்கு வெறும் 40000 கண் சிகிச்சைகள் மட்டுமே பண்ணக்கூடிய அளவில் கண்தானம் நடக்கின்றது.

நான் எனது கண்களை தானம் செய்வது மட்டுமில்லாமல் இந்த கண்தான பற்றாக்குறையை நீக்க, இந்த அறுவை சிகிச்சைகளுக்கு நிதி திரட்ட 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அனைவருக்கும் கண் பார்வை கிடைக்கும் படி செய்து நமது அழகான, மிக வேகமாக வளர்ந்து வரும் நமது தேசத்தை அவர்களையும் காண வைக்கலாம்'' என்றார்.