சினிமா

பிரமாண்ட படத்தில் இருந்து அமலாபால் விலகல்

மலையாளத்தில் பிரபலமான கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து நடிகை அமலா பால் விலகியிருக்கிறார்.

மாலை மலர்

ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’.

‘36 வயதினிலே’ படத்தை இயக்கிய ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் இயக்கும் இந்த படத்தில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், தேதி பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகியதாக அமலாபால் அறிவித்துள்ளார். 

அவருக்கு பதிலாக தற்போது ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா - ஜோதிகா வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

‘காயம்குளம் கொச்சுண்ணி’, 19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்த ஒருவரை பற்றிய படம். இவர் ராபின்ஹுட் போல செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். 

1859-ல் கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவருடைய வாழ்க்கையில் இடம் பெற்ற சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.