சினிமா

வடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்

வடசென்னை படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். #VadaChennai

மாலை மலர்

மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை தனுசும், வெற்றி மாறனும் இணைந்து தயாரித்தனர்.

இப்போது, மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் இணைந்துள்ள ‘வடசென்னை’ படத்தில் தனுசுடன் நாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்...

“தனுஷ் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த போது, எதிர்காலத்தில் அவருடன் எப்படியாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் நினைத்தது போல அது உடனே நடக்கவில்லை.

தனுசுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்து வந்தது. இப்போது, ‘வடசென்னை’ படம் மூலம் அது நனவாகி இருக்கிறது. நான் நடிக்கும் வேடத்தில் முதலில் அமலாபால் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு சமந்தா நடிப்பதாக இருந்தார். இப்போது, நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

தனுசுடன் நடிக்க வேண்டும் என்று மனதுக்குள் பெரிய ஆசை வைத்திருந்ததால் தானோ என்னவோ, அந்த வாய்ப்பு வேறு யாரிடமும் செல்லவில்லை. என்னிடமே தேடி வந்து விட்டது. தனுஷ், வெற்றிமாறன் என்ற இரண்டு பெரிய ஜாம்பவான்களின் படங்களில் நடிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.