சினிமா

எனது மகள் குறித்து பரவும் வதந்திகளில் உண்மையில்லை - நடிகை ரேகா விளக்கம்

90-களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ரேகாவின் மகள் குறித்து சமீபத்தில் பரவி வந்த வதந்திக்கு அவர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் போன்ற படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. இவர் தற்போது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து `கேணி' திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் வதந்தி கசிய விடப்பட்டது.

இதனை மறுத்து நடிகை ரேகா இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார். அதில் "மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன். அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ, ஆசையோ அவருக்குத் துளியும் இல்லை என்பதனையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இது சம்பந்தமாக தவறான தகவல்களை பரப்பி வருவோர் இனியும் தொடராமல் நிறுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி"

இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.