ஏற்கனவே திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அங்கமாலி கோர்ட்டிலும், கேரள ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டன. மீண்டும் ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
இந்தநிலையில் நடிகை கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவும் நடிகர் திலீப்புக்கு ஆதரவாகவும் கேரளாவில் பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
நடிகர் திலீப்புக்கு ஆதரவாகவும், தன்னை இழிவுபடுத்தியும் பி.சி.ஜார்ஜ் எம்.எல்.ஏ. தெரிவித்த கருத்துக்கள் தன்னை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளதாகவும் எனவே பி.சி.ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட நடிகை, கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் திலீப்பை ஆலுவா ஜெயிலில் அவரது தாயார் சரோஜம் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது திலீப்பின் தம்பி அனூப்பும் உடன் சென்று இருந்தார். திலீப் ஜெயிலில் அடைக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் அவர் இப்போதுதான் முதல் முறையாக ஜெயிலுக்கு சென்று தனது மகனை பார்த்து உள்ளார்.
திலீப்பை ஜெயிலில் சந்தித்த நிலையில் அவரது தாய் சரோஜம் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு தனது மகன் நிரபராதி என்று குறிப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகன் திலீப் எந்த குற்றமும் செய்யாதவன். நடிகை கடத்தல் வழக்குக்கும், திலீப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. திலீப்பை பிடிக்காத சிலர் சதித்திட்டம் தீட்டி இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டனர். எனவே நீங்கள் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு எனது மகனுக்கு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.