சினிமா

இன்று மணமகள் தேர்வு - நடிகர் ஆர்யா திருமணம் நடக்குமா?

தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இன்று மணமகள் தேர்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்யா தான் மணக்கவிருக்கும் பெண்ணை இன்று மாலை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Arya #EngaVeetuMaapillai

ஆயிரக்கணக்கான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் இருந்து 16 பெண்களை தேர்வு செய்து அவர்களிடம் ஆர்யா நேர்காணல் நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. இவர்களில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கடைசியாக சுஷானா, அகார்தா, சீதாலட்சுமி ஆகிய 3 பெண்கள் இறுதி போட்டிக்கு வந்துள்ளனர்.

இவர்களில் சுஷானா கனடாவில் இருந்து வந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரசன்னா, பிரேம்ஜி, சினேகா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆர்யாவுக்கு பொருத்தமான ஜோடி குறித்து கருத்து தெரிவித்தனர்.



இறுதிபோட்டியில் கலந்துகொள்ளும் சுஷானா, அகார்தா, சீதாலட்சுமி ஆகியோரை படத்தில் காணலாம்.

நடிகை சினேகா கூறும் போது, “3 பெண்களில் ஆர்யா யாரை திருமணம் செய்துகொண்டாலும் எனக்கு மகிழ்ச்சிதான்” என்றார்.

இன்று (17-ந் தேதி) மாலை நடக்கும் இறுதி போட்டியில் மணப்பெண் யார் என்பதை ஆர்யா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்யா திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுடன் 2 வருடங்கள் குடும்பம் நடத்த வேண்டும் என்றும், அதற்குள் விவாகரத்து செய்யக்கூடாது என்றும் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மணப்பெண்ணாக தேர்வாகும் பெண் ஆர்யாவை மணக்க விருப்பம் இல்லை என்று அறிவித்தால் அது ஏற்கப்படும் என்று அவருக்கு உரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Arya #EngaVeetuMaapillai