சீனாவைச் சேர்ந்த பி.ஒய்.டி. ஆட்டோ எனும் நிறுவனம் உலகின் மிகவும் நீளமான பேட்டரி பேருந்தை உருவாக்கி இருக்கிறது. கே12ஏ என அழைக்கப்படும் இந்த பேருந்து 88 அடிநீளம் (27.5 மீட்டர்) கொண்டிருக்கிறது. இந்த பேருந்து மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது.
இதில் ஒரே சமயத்தில் 250 பேர் பயணிக்கலாம். இது முற்றிலும் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது. இந்த பேருந்தில் 2 சக்கரங்கள் சுழற்சி மற்றும் 4 சக்கர சுழற்சி வசதிகள் உள்ளன. 4 சக்கர சுழற்சி வசதி கொண்ட முதல் பேட்டரி பேருந்து என்ற பெருமையை கே12ஏ பெற்றிருக்கிறது. இதை ஏ.சி. மற்றும் டி.சி. ஆகிய முறையில் சார்ஜ் செய்யலாம்.
இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. தூரம் வரை செல்லக் கூடியது. இந்த பேருந்து ஓராண்டு இயக்கப்பட்டால் இதன் மூலம் 193 டன் கரியமில வாயு வெளியேற்றம் தவிர்க்கப்படும். இது 8,900 மரங்கள் நடுவதற்கு சமமானதாகும் என பேருந்தை உருவாக்கிய பி.ஒய்.டி. நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
முன்னதாக பி.ஒய்.டி. நிறுவனம் 2010, 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் பேட்டரி பேருந்துகளை அறிமுகம் செய்திருக்கிறது.