மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இந்தியா முழுக்க வாகன ஆவணங்கள் கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து இருக்கிறது. அதன்படி வாகனங்களின் கால அவகாசம் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் கொரோனாவைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் முயற்சிகளின் அங்கமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. கால அவகாசம் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்.
அதன்படி ஓட்டுனர் உரிமம், அனைத்து வாகனங்களுக்கான ஆர்சி, பர்மிட், தகுதிச் சான்று உள்ளிட்டவைகளின் கால அவகாசம் மார்ச் 2021 இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை நான்காவது முறையாக வாகன கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு மார்ச், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இதேபோன்ற அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.