ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஜனவரி 2020 மாதத்தில் தனது இருசக்கர வாகனங்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்நாட்டில் 3,74,091 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 29,292 யூனிட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது.
ஜனவரி 2019 இல் ஹோண்டா நிறுவனம் 4,00,695 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. ஏப்ரல் 1, 2020 முதல் பி.எஸ்.6 விதிகள் அமலாக இருக்கும் நிலையில், பி.எஸ்.6 வாகனங்கள் விலை உயர்த்தப்பட இருக்கின்றன. விலை உயர்வு காரணமாக விற்பனை அதிகரிப்பதில் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து சிக்கலான சூழ்நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பி.எஸ்.6 ஆக்டிவா 6ஜி மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2019-இல் ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்ததன் மூலம் இந்தியாவில் முதல் பி.எஸ்.6 வாகனத்தை வெளியிட்ட நிறுவனமாக ஹோண்டா இருக்கிறது.
தற்சமயம் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 6ஜி, ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6, ஹோண்டா எஸ்.பி. 125 போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.