கார்

உலகின் முதல் பறக்கும் கார்: சாதித்துக் காட்டிய சீனா

உலகின் முதல் பறக்கும் காரை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.இதற்கான சோதனை ஓட்டம் துபாயில் கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்டது.

மாலை மலர்

பீஜிங்:

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெரிசல் அதிகரித்து பயணத்தை தாமதப்படுத்துகின்றன. அத்துடன் பயணத்தையும் சலிப்படைய செய்கிறது.

எனவே, பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தப் போட்டியில் சீனா முந்தியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங், உலகிலேயே முதல் பறக்கும் பேட்டரி காரை தயாரித்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை 2022ம் ஆண்டு துபாயில் நடத்தி வெற்றி பெற்றது.

கடந்த ஞாயிறன்று சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வர்த்தக காட்சியில் இந்தப் பறக்கும் கார் பீஜிங்கின் டேக்சிங் விமான நிலையத்தில் முதல் முறையாக தனது பயணத்தை மேற்கொண்டது.

ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தில் கார் போன்ற வடிவத்தில் பறக்கும் இந்தக் காருக்கு எக்ஸ்பெங் நிறுவனம் எக்ஸ் 2 என பெயரிட்டுள்ளது. அதிகபட்சம் 170 கிலோகிராம் எடையை தாங்கி பறக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும் கார்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.