பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் குருவோடு கூடி சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார நிலை திருப்தி அளிக்கும். புகழ்பெற்றவர்களின் பட்டியலில் இடம்பெறும் விதத்தில் சாதனைபுரிவீர்கள். நல்ல சந்தர்ப்பங்கள் வருவதை நழுவவிட மாட்டீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் மேன்மை உண்டு. வெளிநாட்டுப் பயணம் அனுகூலம் தரும். குடும்பத்தில் உள்ளவர்கள், உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நடைபெறும். பொதுவாழ்வில் பொறுப்புகள் மாறி மகிழ்ச்சி தரும்.
உங்கள் ராசிக்கும், 10-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் புதன். அவர் ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். இதன் விளைவாக விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வந்துசேரும். சூரியனோடு புதனும் இணைந்து சஞ்சரிப்பதால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயமாகத் தொழில் செய்யலாமா? என்று சிந்திக்கும் நேரம் இது. அதற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். மனச்சோர்வு ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம். பயணங்கள் அதிகரிக்கும் நேரம் இது. ஆரோக்கியத்திலும் அடிக்கடி தொல்லைகள் ஏற்படும். 'குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துச் செலவு ஏற்படுகின்றதே' என்று கவலைப்படுவீர்கள்.
ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தனாதிபதியான அவர், தன ஸ்தானத்திற்கே வருவது அற்புதமான நேரம்தான். வருமானம் அதிகரிக்கும். வளர்ச்சி கூடும். எதிர் காலத்தைப் பற்றிய பயம் அகலும். நினைத்த காரியத்தை உடனடியாக செய்து முடிப்பீர்கள். தொழில் வெற்றிநடைபோடும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நல்ல சந்தர்ப்பங்கள் நாளும் வந்து கொண்டேயிருக்கும். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது, வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். தற்போது பார்க்கும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். மொத்தத்தில் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்தபடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் வரும். மாணவ - மாணவியருக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியரின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. வருமானப் பற்றாக்குறை அகலும்.