பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். உச்சம் பெற்ற குருவும், அவரோடு புதனும் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றனர். குருவின் பலத்தால் நினைத்த காரியம் நிறைவேறும். நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். செல்வச் செழிப்பும், சிறப்பான வாழ்க்கையும் அமையும். கல்வி விருத்தி, கடமையில் வெற்றி உண்டு. புதிய திருப்பங்கள் பலவும் காணும் மாதம் இது. குரு பார்வை பலனால் வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற வழிபிறக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். குல தெய்வ வழிபாடும். இஷ்ட தெய்வ வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும், குறுக்கீடு சக்திகளை அகற்றும்.
ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று புதன், சிம்ம ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு புதன் வருவதால் தனவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. விரயாதிபதியாகவும் புதன் இருப்பதால் பணம் வந்த மறுநிமிடமே செலவாகும். 'சேமிக்க இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். எந்த ஒரு காரியத்தையும் பணத்தை வைத்துக் கொண்டு செய்ய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இல்லை. காரியத்தை தொடங்கிவிட்டால் பணப் புழக்கம் தானாக வந்துசேரும். ‘புத ஆதித்ய யோகம்' செயல்படும் நேரம் இது. குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல்- வாங்கல்களில் இருந்த மந்த நிலை மாறும். நீண்ட நாட்களாக வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்.
ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். இதுவரை நீச்சம் பெற்றிருந்த சுக்ரன் இப்பொழுது பலம்பெறுகிறார். உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். கடன்சுமை பாதிக்குமேல் குறையும். கட்டிடம் கட்டிக் குடியேற வேண்டுமென்று கற்பனை செய்து வைத்திருந்த உங்களின் கனவுகள் நனவாகும். நம்பிக்கையும், நாணயமும் கொண்ட நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். பயணங்கள் பலன் தருவதாக அமையும். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்வதற்காக எடுத்த முயற்சி கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்ந்த நிலை ஏற்படும். கலைஞர்களுக்கு அடுத்தடுத்த ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும். மாணவ -மாணவியருக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சியைத் தரும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.