search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cold wave"

    • கடந்த 4 நாட்களாக ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவு அதிகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக உறைபனி தாக்கம் தொடங்கும். குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறைபனி பொழிவு ஏற்படும். ஆனால், கடந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாக கடந்த நவம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கியது.

    இதற்கிடையே ஊட்டியில் மீண்டும் மழை பெய்ததால், பனிப்பொழிவு குறைந்தது. மீண்டும் கடந்த 2 வாரத்திற்கு முன்பு உறைபனி தாக்கம் காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை கடுங்குளிரும் நிலவி வருகிறது.

    ஊட்டியில் நேற்று காலையில் அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல் உறைபனி படர்ந்து இருந்தது. ஊட்டி ரெயில் நிலையம், குதிரை பந்தய மைதானம், காந்தல் முக்கோணம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் உறைபனி தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    அதிகாலையில் பச்சை புல்வெளிகளே தெரியாத வகையில் உறைபனி படர்ந்து இருந்தது. அவலாஞ்சி, தலைகுந்தா, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்சமாக பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நேற்று பதிவானது. ஊட்டி நகரில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் மீது பனி கொட்டி கிடந்தது. வாகன ஓட்டிகள் உறைபனியை அகற்றி விட்டு, வாகனங்களை இயக்கினர். ஊட்டியில் குறைந்தபட்சமாக 2.8 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

    ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடுங்குளிரை போக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். மேலும் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது.

    • டெல்லியில் வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியசாக பதிவானது.
    • ஒடிசா மாநிலத்திலும் கடும் குளிர் நிலவி வருகிறது.

    புதுடெல்லி :

    மார்கழி மாதத்தில் பனி அதிகமாக இருப்பது வழக்கமானதுதான். ஆனால், வடமாநிலங்களில் இந்த ஆண்டு பனி வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.

    செயற்கைக்கோள் படங்களை பார்த்ததில், பஞ்சாப் மற்றும் அதைஒட்டிய வடமேற்கு ராஜஸ்தானில் இருந்து அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் வழியாக பீகார் மாநிலம் வரை பனிஅடுக்கு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனால், வடமாநிலங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. டெல்லியில், தொடர்ந்து 5-வது நாளாக நேற்று குளிர்காற்று வீசியது. அங்கு நிலவும் குறைந்தபட்ச வெப்பநிலை, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற குளிருக்கு பெயர் பெற்ற மாநிலங்களின் வெப்பநிலையை விட குறைவாக உள்ளது. இதனால், டெல்லி மக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள்.

    டெல்லியில், காலையில் பனிமூட்டமாக காணப்பட்டது. 25 மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால், சாலையில் சென்ற வாகனங்கள் திணறின. எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    உத்தரபிரதேசத்தில், சாலையில் எதையும் பார்க்க முடியாதநிலையில் கோர விபத்து ஏற்பட்டது. ஒரு பஸ், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து நேபாளத்துக்கு சென்று கொண்டிருந்தது.

    ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் உன்னா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் எதுவும் தெரியாததால், எதிரில் வந்த லாரியுடன் மோதியது. இதில் பஸ்சில் சென்று கொண்டிருந்த 4 பேர் பலியானார்கள்.

    டெல்லியில் நிலவிய பனிமூட்டம், ரெயில், விமான போக்குவரத்தையும் பாதித்தது. 267 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. அவற்றில், 82 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 140 பயணிகள் ரெயில்களும், 40 மின்சார ரெயில்களும் அடங்கும்.

    நேற்று முன்தினம் 88 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல், விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 30 விமானங்களின் போக்குவரத்து தாமதமானதாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 5 விமானங்கள், வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டன.

    டெல்லியில் வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியசாக பதிவானது. கடுமையான பனிப்பொழிவால், டெல்லியில் பள்ளிகளுக்கான விடுமுறை 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலத்திலும் கடும் குளிர் நிலவி வருகிறது. வெப்பநிலை 3.7 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது. காஷ்மீரில் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    வடமாநிலங்களில் கடும் குளிர் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், வாகனங்களில் விளக்கை போட்டுச் செல்லுமாறும் கூறியுள்ளது.

    ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினை இருப்பவர்கள், காலை வேளையில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

    • ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    • அடுத்த 4 நாட்களுக்கு மூடுபனி, கடும் குளிர் நிலை தொடரும்.

    வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. தலைநகர் டெல்லியில் பனிமூட்டம் காரணமாக, 14 ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.

    அடுத்த நான்கு நாட்களுக்கு இமாச்சலப் பிரதேசம், டெல்லி, பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் வடக்கு ராஜஸ்தானிலும் இரவு மற்றும் காலை நேரங்களில் அடர்ந்த மூடுபனி காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என்றும் அதன் பின் நிலைமை படிப்படியாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மூடுபனி மற்றும் கடும் குளிரை கருத்தில் கொண்டு, பீகார் மாநிலம் பாட்னாவில் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் டிசம்பர் 31 வரை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • உத்தர பிரதேசத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயங்காது என அறிவிப்பு
    • பஞ்சாபில் பள்ளிகள் ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு தொடங்கும் என தகவல்.

    வட இந்தியாவில் தற்போது கடும் குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் அடுத்த சில நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலையில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது.

    அடர்ந்த மூடுபனியால் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அந்த மாநிலத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயங்காது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இதேபோல் பஞ்சாபின் பல பகுதிகளில் நிலவிய அடர்த்தியான மூடுபனியால் வாகனஓட்டிகள் பொதுமக்கள் அவதியடைந்தனர்.  இதைடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். 

    ×