பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா- ஹாங்காங் இன்று மோதல்

இலங்கை 75 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பதிவு செய்தது.
IND vs HONGKONG
Published on

8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது.

இதில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது.

இந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2-வது லீக்கில் இன்று (வியாழக்கிழமை) ஹாங்காங்குடன் மோதுகிறது.

தாய்லாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்து 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. ஒரு விக்கெட்டுக்கு 91 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்த இந்திய அணிக்கு மிடில் வரிசை சொதப்பலால் ஸ்கோர் வெகுவாக குறைந்து போனது.

இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். மற்றபடி இந்தியா பலம் வாய்ந்த அணியாக திகழ்வதால், குட்டி அணியான ஹாங்காங்கை எளிதில் சுருட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகள் சர்வதேச 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோத இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 3, 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இதற்கிடையே 'பி' பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கை, அறிமுக அணியான இந்தோனேசியாவை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 7 விக்கெட்டுக்கு 124 ரன்களே எடுத்தது.

ஒரு கட்டத்தில் 62 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த அந்த அணியை நிலாஸிகா சில்வா (50 ரன்), காவ்யா கவிந்தி (15 ரன்) மீட்டனர். அடுத்து 125 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்தோனேசியா 18.3 ஓவர்களில் 49 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இதனால், இலங்கை 75 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பதிவு செய்தது. இலங்கை கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஹாட்ரிக் சாதனையுடன் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com