ரோகித் சர்மாவை ஏலத்தில் எடுக்க லக்னோ அணி தயாராக இருக்கிறது - ஜாண்டி ரோட்ஸ்

5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை தக்க வைக்குமா இல்லையா என்று தெரியவில்லை.
LGS Jonty Rhodes - ROHIT SHARMA
Published on

18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான மெகா ஏலம் நடக்கிறது. டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 கட்டங்களாக ஏலம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது. இதற்கு கேப்டன் பதவிதான் காரணம் என்று கூறப்பட்டது. ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. இது போட்டியின் போது கடுமையாக எதிரொலித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தற்போது 20 ஓவர் உலக கோப்பையை வென்ற ரோகித்சர்மா, 20 ஓவர் அணி இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் வேகப் பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 4 வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மாவை ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், "ஐபிஎல் ஏலத்தில் ரோகித் இடம்பெற்றால் அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக எடுக்க தயாராக இருக்கிறோம். அவர் தலைசிறந்த வீரர். எந்த அணியும் அவரை மகிழ்ச்சியாக ஏலத்தில் எடுக்கும்" என்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com