ரோகித் சர்மா ஓய்வு.. அவரின் முன்னாள் கேப்டன் கூறியது என்ன?

இந்திய அணி செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஓய்வு பெற்று விடுவார் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
ரோகித் சர்மா ஓய்வு.. அவரின் முன்னாள் கேப்டன் கூறியது என்ன?
Published on

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், இந்திய அணி டெஸ்ட் தொடரையும் இழந்தது. இதையடுத்து, ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணி செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பலரும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்று விடுவார் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுகிறார் என்று அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ரோகித் சர்மா ஓய்வு குறித்து ஐ.பி.எல். தொடரில் டெக்கன் சார்ஜர்ஸ் அணியில் ரோகித் சர்மாவுக்கு கேப்டனாக இருந்த ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய அவர், "ரோகித் இங்கிலாந்து செல்வார் என்று நான் நினைக்கவில்லை. வீடு திரும்பியதும் அதுபற்றி முடிவு செய்வேன் என்று அவர் சொல்வதாக எனக்கு தோன்றியது. அவர் வீடு திரும்பியதும் இரண்டு மாத குழந்தையை தான் அவர் எதிர்கொள்வார். குழந்தைக்கு அவர் டயப்பர்களை மாற்ற வேண்டும். அது அவரை இங்கிலாந்து செல்ல ஊக்குவிக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவருக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்படும் என்று நான் நினைக்கிறேன், அதுவே அவரை வெளியேற்றக்கூடும்."

"ஜஸ்பிரித் பும்ரா முழுநேர கேப்டனாக இருக்க வேண்டுமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அது அவருக்கு கொஞ்சம் சவாலாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். எனவே, அடுத்த கேப்டன் யாராக இருக்கும் என்பதே பலரின் யூகமாக இருக்கும். உண்மையில் அவர்கள் விராட் கோலியிடம் திரும்பி செல்வார்களா? அவர்கள் அதை செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்," என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com