

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் விளையாட இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் 2027-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெறுகிறது.
உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணியை தயார்படுத்தும் நிலையில் பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. கூட்டத்தில் இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
பயிற்சியாளர் கவுதம் காம்பீர், கேப்டன் சுப்மன் கில் மற்றும் அணி நிர்வாகம் இத்தகைய தொடர் ஒன்றை நடத்தக் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்புடன் பி.சி.சி.ஐ. பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 4 முதல் 6 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை நடத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட்அணியின் சுற்றுப்பயணங்கள் குறித்து பி.சி.சி.ஐ. இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா உடனான தொடரை ஏற்பாடு செய்வதற்கு எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்திற்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருக்கிறது.
உலகக் கோப்பை போட்டிக்கு முன் வீரர்களின் உடற்தகுதியில் பிசிசிஐ சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.