

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது. அதை முன்னிட்டு நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அதையொட்டி அதிகாலை சுப்ர பாதத்தில் மூலவரை துயிலெழுப்பி தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் நடந்தது. காலை 6 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தூய தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.
அதன்பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரனம், கஸ்தூரி மஞ்சள், பச்சகற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற நறுமண பொருட்கள் அடங்கிய திரவியத்தை கோவில் முழுவதும் தெளித்தனர். மதியம் 12.30 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
உற்சவத்தின் ஒரு பகுதியாக நாளை இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அனுமந்த வாகன வீதிஉலா, 26-ந்தேதி கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி திருப்பதியைச் சேர்ந்த பக்தர் நரசிம்மன் என்பவர் ரூ.18 ஆயிரம் மதிப்பிலான திரைசீலையை காணிக்கையாக வழங்கினார்.