ஞானத்தை வழங்கும் பள்ளிக்கூட பிள்ளையார்

தெய்வங்களில் முதன்மை பெற்றவராக இருப்பவர் மகாகணபதி.சிறுத்தொண்டர் மகனான சீராளன் படித்த பள்ளிக் கூடம்.
ஞானத்தை வழங்கும் பள்ளிக்கூட பிள்ளையார்
Published on

கல்வியை வழங்கும் தெய்வங்களில் முதன்மை பெற்றவராக இருப்பவர் மகாகணபதி ஆவார். உலகில் உள்ள பெரிய புத்தகமாக மகாபாரதத்தை தம் கைப்பட எழுதி பெருமை சேர்த்தவர். அவர் அனேக அன்பர்களுக்கு ஞானத்தை போதிக்கும் குருபிரானாக இருப்பதை காண்கிறோம். தமிழ் வேதமான திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பிக்கு அவர் ஆசிரியனாக இருந்து கல்வி கற்பித்ததை அவருடைய வரலாறு கூறுகிறது. சில தலங்களில் அவருக்குப் பள்ளிக்கூட விநாயகர் என்ற பெயரும் வழங்குகிறது.

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் வாழ்ந்து வீடுபேறு பெற்றதால், திருச்செங்காட்டாங்குடி. அதற்கும் அதன் அருகிலுள்ள தலமான மருகலுக்கும் இடையே சிறுத்தொண்டர் மகனான சீராளன் படித்த பள்ளிக் கூடம் உள்ளது. அந்த இடத்தில் இப்போது விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அது பள்ளிக்கூட பிள்ளையார் கோவில் என வழங்குகிறது.

ஆவுடையார் கோயில் எனப்படும் திருப்பெருந்துறை தலத்தில் பூஜித்து வந்த அந்தணர்கள், குழந்தைகளுக்கு வேத ஆகமங்களைப் பயிற்றுவிக்க நல்ல குருமாரைத் தேடி வந்த அவர்களின் பெருமைகளை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் தானே வயோதிக ஆசிரியனாகத் தோன்றினார்.

அத்தலத்து சிறார்களுக்கு அவர் உயர்ந்த பாடங்களை நடத்தி ஞானமூட்டினார். அப்படி அவர் வீற்றிருந்து பள்ளிக்கூடம் நடத்திய இடத்தில் ஒரு விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் பள்ளிக்கூடப் பிள்ளையார் என்றே பெயர் பெற்றது. இப்படி தமிழக மெங்கும் பல ஊர்களில் பள்ளிக்கூடப் பிள்ளையார் எனும் பெயரில் பல விநாயகர் ஆலயங்கள் இருந்து வந்துள்ளன.

விநாயகரின் அகன்ற காதுகள் நிறைய விஷயங்களை விடாமல் கேட்க வேண்டும் என்பதையும் துதிக்கையால் மூடியவாய் அதிகமாகப் பேசாமல் ஞானத்தைச் சிந்திக்க வேண்டும் என்பதையும், அவரது உடைந்த கொம்பு எழுதும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு நல்ல விஷயங்களைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதையும், கையிலுள்ள மோதகம் எப்போது அறிவில் நிறைவாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பதாகக் கூறுவர். அவர் கையிலுள்ள பாச, அங்குசம் மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்தி அடக்கி ஒருமுக சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த மனஅடக்கம் ஒருமுக சிந்தனை எழுதும் ஆற்றல், ஆசிரியர்கள் சொல்வதை ஒன்றுவிடாமல் கேட்டுக் கொள்ளுதல், நன்கு சிந்தித்தல் எப்போது அறிவைத் தேடுவதில் கவனம் கொள்ளுதல் ஆகியவை ஒவ்வொரு பள்ளி மாணவனுக்கும் தேவையான குணங்களாகும். அவற்றை நினைவூட்டலே ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அவர் வீற்றிருந்து அவர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com