

தமிழ் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் ஆடி மாதம் என்பது அம்மன் வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான, மங்களகரமான மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் கோடைக்காலம் முடிந்து காற்று பலமாக வீசும். இக்காலத்தில் பரவக்கூடிய அம்மை, காய்ச்சல் போன்ற வெப்ப கால நோய்களிலிருந்து காக்க அம்மனுக்கு வேப்பிலை, மஞ்சள் சாற்றி வழிபடுகின்றனர். அதன் மூலம் நோய்கள் காற்றாக பறந்துவிடுகிறது.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலி பெண்கள் விரதமிருந்து, அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து வழிபடின், அவர்களின் மாங்கல்ய பலம் பெருகும் (கணவனின் ஆயுள் கூடும்) என்பது நம்பிக்கை. திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் அமையவும், தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படவும் ஆடி பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி வழிபடுவது விசேஷமானது.
ஆடி மாதத்தில் எலுமிச்சம்பழ தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டால், வீட்டில் உள்ள செய்வினை, கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்கள்ங்கி, நேர்மறை ஆற்றல் பெருகும். நாகாத்தம்மன் அல்லது புற்றுகளுக்கு பால் ஊற்றி வழிபடின், நாக தோஷங்கள் மற்றும் ராகு-கேதுவினால் ஏற்படும் தடைகள் நீங்கும்.
ஆடி மாதத்தில் ஆதிபராசக்தி, மாரியம்மன், துர்க்கை மட்டுமின்றி, லட்சுமி தேவியையும் வழிபடுகிறோம். ஆடி கடைசி வெள்ளியன்று கொண்டாடப்படும் வரலட்சுமி விரதம் வீட்டில் செல்வச் செழிப்பையும், தானிய லாபத்தையும் தந்து லட்சுமி கடாட்சம் பெருகும். வியாபாரத்தில் தேக்க நிலை உள்ளவர்கள் ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபடின், தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பர்.
அன்னை பராசக்தி துர்க்கையின் வடிவமாக விளங்குவதால், அவளை வணங்குபவர்களுக்கு மனதில் உள்ள பயம் நீங்கி, எதையும் எதிர்கொள்ளும் அசாத்திய தைரியமும், மன அமைதியும் கிடைக்கும்.
இவை தவிர ஆடி செவ்வாய், பெண்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் தரும். ஆடி வெள்ளி, லட்சுமி கடாட்சம் மற்றும் மாங்கல்ய பலம் தரும். ஆடிப்பூரம், அம்பிகை அவதரித்த நாள். அன்று வளைகாப்பு நடத்தி வழிபடின் குழந்தை பாக்கியம் கிட்டும். ஆடி அமாவாசையில் முன்னோர்களின் ஆசியுடன் சேர்த்து அம்மனின் அருளையும் பெற்றுத் தரும்.