

கருட பஞ்சமி நாளை (திங்கட்கிழமை) வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையை சுத்தம் செய்து, கருடாழ்வார் மற்றும் மகாவிஷ்ணுவின் படங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
இறைவனுக்கு மஞ்சள், குங்குமம், மலர்கள், துளசி சாற்றி, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பழங்கள், பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற நைவேத்தியங்களை படைக்கலாம். அன்றைய தினம் விஷ்ணு மற்றும் கருடன் பாடல்களையும், மந்திரங்களையும் பாராயணம் செய்து வழிபடலாம்.
கருட பஞ்சமி தினத்தன்று, அமிர்த கலசத்துடன் இருக்கும் கருடனையும், கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளையும் தரிசித்தால் மிகவும் விசேஷமாகும். தன்னை எப்போதும் சுமந்துக் கொண்டிருக்கும் கருடனை வழிபடுபவர்களுக்கு மகா விஷ்ணுவின் அருளும் முழுமையாக கிடைக்கும்.
கருடனின் துணிச்சலையும், தாய்ப் பாசத்தையும் கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவரை தன் வாகனமாக ஏற்றுக்கொண்டார். இதன் நினைவாக கருட பஞ்சமி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்தோ கருட ப்ரசோதயாத்
கருட பஞ்சமி தினத்தன்று, இந்த காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும், ஆபத்துகளும் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.