மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்

கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது. கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்
Published on

தொண்டை நாட்டின் புகழ் பெற்ற அம்மன் ஆலயங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் புகழ் பெற்றது.

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலைப் போன்றே மாங்காடு அம்மன் கோவிலும் சமயச் சிறப்பும் கலைச்சிறப்பும் பெற்றது.

இயற்கையான சூழலில் மக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட இக்கோவில் விஜய நகர காலத்தில் முழுமையான திருப்பணிப் பெற்று விரிவு படுத்தப்பட்டுள்ளது.

இக்கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முகமண்டபம், முகப்பு மண்டபம், முதல் திருச்சுற்று பிரகாரம், இரண்டாம் திருச்சுற்று கோபுர வாயில் போன்ற பல்வேறு பகுதிகளைப் பாங்குறப் பெற்றுத் திகழ்கிறது.

கோவில் கருவறை சதுர வடிவுடையது. கருவறை சுவரை ஒட்டி அம்மன் வடிவம் வழிபாட்டில் உள்ளது.

கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.

கருவறை முன் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது.

இது தூண்கள் எதுவுமின்றி சதுரவடிவில் எளிமையாக காணப்படுகிறது.

அம்மன் கோவில் கருவறை மற்றும் அர்த்த மண்டப புறச்சுவர்களில் பஞ்ச கோஷ்டங்கள் அமைந்துள்ளன.

இக்கோஷ்டங்களில் மூன்று மாடங்களில் இறைவடிவங்கள் அமைக்கபட வில்லை.

பொதுவாக சக்திகளின் வடிவங்கள் அமைக்கப் படுவதுண்டு.

இங்கு அர்த்த மண்டப கோஷ்டம் ஒன்றில் இடம்புரி விநாயகரின் சிற்பவடிவம் ஒன்று அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறது.

இதன் மேற்கரங்கள் அங்குசத்தையும், பாசத்தையும் பற்றியுள்ளது.

கீழ்வலக்கரம் தந்தத்தை கடக முத்திரையில் பிடித்துள்ளது.

கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.

மற்றொரு கோஷ்டத்தில் காளியின் வடிவம் வழிபாட்டில் உள்ளது.

கருவறையையும் அர்த்த மண்டபத்தையும் சுற்றி வலம்வர திருச்சுற்று பாதை உள்ளது.

திருச்சுற்று பாதையைச் சுற்றிலும் உருளை வடிவிலான கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

இத்தூண்களின் மேல் பகுதி வெட்டுப் போதிகையுடன் உள்ளது.

இந்த திருச்சுற்றை அலங்கரிக்கும் பகுதிகள் இடைச்சோழர் காலத்தவை.

கன்னியாகுமரியில் அம்மன் கோவில் திருச்சுற்றுத் தூண்களை ஒத்த அமைப்பில், இவை காணப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com