மந்திரிகளை மலர்தூவி வரவேற்க கூடாது: கட்சி தொண்டர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி உத்தரவு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வரும்நிலையில், தற்போது மந்திரிகளை மலர் தூவி வரவேற்க கூடாது என கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மந்திரிகளை மலர்தூவி வரவேற்க கூடாது: கட்சி தொண்டர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி உத்தரவு
Published on

உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. முதல்வராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் அங்கு பல்வேறு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

அரசு அலுவலகங்களில் துப்பினால் அபராதம், வருகை நேரம் குறித்து பயோமெட்ரிக் முறை, அதிகாரிகள் மாற்றம், 15 பொது விடுமுறை தினங்கள் ரத்து என்பது உள்பட பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் மந்திரிகளை மலர் தூவி வரவேற்க கூடாது என்று கட்சி தொண்டர்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேச மாநில பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-

மாவட்ட தலைநகரங்களுக்கு வரும் மந்திரிகளை நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி வரவேற்க கூடாது. அதற்கு பதிலாக தூய்மை பிரசாரத்தில் நீங்கள் ஈடுபடுவதை நாங்கள் வரவேற்கிறோம்.

மந்திரி வருவதற்கு ஒரு நாள் முன்பு தூய்மை பிரசாரத்தில் ஈடுபடுங்கள். எந்தந்த பகுதிகளில் பிரச்சினை இருக்கிறது என்பதை கண்டறியுங்கள். நான் வரும் போது என்னிடம் அதை தெரிவிக்கவும்.

நாம் பிரதமரின் முன் மாதிரியாக இருக்கிறோம். அவரை போல நாமும் எளிமையை பின்பற்றுவோம்.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

மேலும் முதல்-மந்திரி ஆதித்யநாத் வாரம்தோறும் எம்.பி., எம்.எல்.ஏக்களை சந்தித்து அவர்கள் தொகுதி பிரச்சினைகளை கேட்க உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com