

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியான பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார். அதேசமயம், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைகோர்த்து தங்களுக்கு போதிய மெஜாரிட்டி இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என உரிமை கோரியது.
ஆனால், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.