

ஆஸ்திரேலியாவின் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 3 முறை பெரும் விபத்து தவரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 9, ஞாயிறு காலை, வர்ஜின் ஆஸ்திரேலியா என்ற விமானம் ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்தபோது, விமானக் கட்டுப்பாடு மையம் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) தவறான அனுமதி அளித்ததால் குவாண்டாஸ் என்ற மற்றொரு விமானம் குறுக்கே கடக்க முயன்றது.
வர்ஜின் விமானத்தின் விமானி உடனடி பிரேக் போட்டதால் 1 கி.மீ இடைவெளியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதே ஞாயிறு காலை, ஜெட்ஸ்டார் என்ற விமானம் ஓடுதளத்தில் செல்லும் போது, கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் மீது மோதுவது போல சென்றது. கத்தார் ஏர்வேஸ் விமானி பிரேக் போட்டதால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டது.
முன்னதாக ஜூலை 27 அன்று இரண்டு குவாண்டாஸ் விமானங்கள் ஒரே நேரத்தில் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டதால் மோதும் நிலைக்குச் சென்றன.
இரண்டு வார இடைவெளிகள் தொடந்து நடந்த இந்த மூன்று பாதுகாப்பு குறைபாடு சம்பவங்கள் சிட்னி விமான நிலையம் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது.
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமை ஆணையர் ஆங்கஸ் மிட்செல், "நடக்கக்கூடாத 3 சம்பவங்கள் நடந்துள்ளன.
சிட்னி விமான நிலையத்தில் அப்போது நிலவிய பணிச்சுமை, கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் பயிற்சி முறைகள் குறித்து விரிவாக விசாரிக்கப்படும்" என்றார்.
ஏர் டிராபிக் கண்ட்ரோலர்களை புதிதாக வேலைக்கு சேர்த்து பயிற்சி அளிக்கும் பணி நடந்து வரும் சூழலில் இந்தத் தவறுகள் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உத்தரவிட்டுள்ளார்.