ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல்- நூலிழையில் உயிர் தப்பிய இங்கிலாந்து முன்னாள் பிரதமர்

அதிநவீன டிரோன் ஒன்றை ரஷியா அந்த ரெயில் நிலையத்தின் மீது வீசித் தாக்குதல் நடத்தியது.
Russia
Published on

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, போலந்து எல்லை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், சுவீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சிறப்பு ரெயிலில் சென்றனர்.

போலந்து எல்லைக்கு மிக அருகில் உள்ள யாஹோடின் ரெயில் நிலையத்தில், போரிஸ் ஜான்சன் உள்ளிட்டவர்கள் பயணித்த இந்த ரெயில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றது.

அந்த ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதிநவீன டிரோன் ஒன்றை ரஷியா அந்த ரெயில் நிலையத்தின் மீது வீசித் தாக்குதல் நடத்தியது.

இதில் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு ரெயிலின் என்ஜின் தீப்பற்றி எரிந்தது.

முன் எச்சரிக்கையாகப் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன்,"எல்லைப் பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்களுக்கான ரெயில் மீது புதின் எதற்காக குண்டு வீசினார் என்ற விபரீத புத்தி புரியவில்லை.

உக்ரைன் மக்கள் தினமும் சந்திக்கும் கொடூரத் தாக்குதலுக்கு இதுவே சான்று. அப்பாவி உக்ரைன் மக்கள் மீது நடத்தப்படும் இது போன்ற அறிவற்ற தாக்குதல்களுக்கு மேற்கத்திய நாடுகள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்"

என ஆவேசமாக பதிவிட்டு உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com