நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

காட்டாற்று வெள்ளத்தில் ரசுவா மாவட்டத்தில் 4 பள்ளிகளும், நுவாகோட் மாவட்டத்தில் 8 பள்ளிகளும் முழுமையாக சேதமடைந்தன.
Nepal Floods
Published on
Summary

நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 600-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் குறித்து தகவல் எதுவும் இதுவரை கிடைக்காததால் பெற்றோர் தவித்து வருகிறார்கள்.

நேபாள காட்டாற்று வெள்ளம்

நேபாளத்தில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் அந்நாட்டின் 8 மாவட்டங்களை சீர்குலைத்து விட்டது. வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் அடித்து செல்லப்பட்ட நிலையில் மீட்புப் பணிகள் இன்று 10-வது நாளாக நீடிக்கிறது. இதில் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை 1,280-ஆக உயர்ந்தது.

5 ஆயிரத்தை தாண்டியது

இந்த நிலையில் நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை வெளிநாட்டினர் உள்பட 5,083 பேரை காணவில்லை. இதில் ஆன்மீக யாத்திரை சென்ற இந்தியர்களும் அடங்குவர்.

திபெத் பகுதி

அதேபோல் வெள்ளம் உருவான திபெத் பகுதியில் 21 பேர் பலியாகி இருக்கிறார்கள். அங்கு 541 பேரை காணவில்லை. நேபாளத்தில் மாயமானவர்களின் உடல்கள் கிடைக்காததால் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கருதி உருவ பொம்மைகளை வைத்து உறவினர்கள் இறுதிச்சடங்குகளை நடத்தி வருகிறார்கள்.

600 பள்ளி குழந்தைகள்

காட்டாற்று வெள்ளத்தில் ரசுவா மாவட்டத்தில் 4 பள்ளிகளும், நுவாகோட் மாவட்டத்தில் 8 பள்ளிகளும் முழுமையாக சேதமடைந்தன. இந்த நிலையில் 600-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் குறித்து தகவல் எதுவும் இதுவரை கிடைக்காததால் பெற்றோர் தவித்து வருகிறார்கள்.

தகவல் தொடர்பு வசதிகள் முடங்கியுள்ளதால் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது மிகுந்த சிரமமாக உள்ளது. தகவல் தொடர்பு வசதிகள் சீரமைக்கப்பட்டு, அதிகாரிகள் நேரில் சென்று உயிர் பிழைத்தவர்களை உறுதிப்படுத்தும் வரை நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கதி என்ன என்பது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நுவாகோட் கல்வி மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் தலைவர் சூர்யா பகதூர் கத்ரி கூறும்போது, காணாமல் போன மாணவர்கள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைச் சேகரிக்கத் தலைமை ஆசிரியர்களுடன் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். ஆனால், தகவல் தொடர்பு வசதி முடங்கியுள்ளதால் துல்லியமான எண்ணிக்கையை வழங்க முடியவில்லை.

எங்கள் மாவட்டத்தில் குறைந்தது 300 மாணவர்கள் காணாமல் போயிருக்கலாம் என்று மதிப்பிடுகிறோம் என்றார். காணாமல் போனவர்களை நேபாளம் முழுவதும் உறவினர்கள் தொடர்ந்து தேடி வரும் நிலையில், பள்ளி குழந்தைகளின் நிலை குறித்த நிச்சயமற்ற தன்மையும் நீடிக்கிறது.

யுனிசெப் அமைப்பு

இதற்கிடையே ரசுவா, நுவாகோட், தாடிங் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 17 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்து உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com