

காசாவில் பாலஸ்தீனக் குழந்தைகளை, இஸ்ரேல் திட்டமிட்டு இலக்கு வைத்துக் கொல்வதாகவும், இது தொடர்ந்து நடைபெற்று வரும் இனப்படுகொலையின் ஒரு பகுதி என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையம் தனது புதிய அறிக்கையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்வது என்பது, அங்குள்ள பாலஸ்தீனச் சமூகத்தின் எதிர்காலத்தையும், அதன் தொடர்ச்சியையும் அழிப்பதற்காக இஸ்ரேல் வகுத்துள்ள ஒரு திட்டமிட்ட உத்தி என்றும் ஐ.நா. ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
காசாவில் கடந்த ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் இந்த கொலைகள் தொடர்ந்தன என ஐ.நா. தெரிவித்துள்ளது.
2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. அன்றிலிருந்து காசாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில், 21,280-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட குறைந்தது 73,035 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என, அப்பகுதியின் ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனை ஐ.நா.வும் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ஐ.நா.கூறியுள்ளதாவது;
2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் 20,000 குழந்தைகளைக் கொன்றுள்ளதுடன், 44,000 பேரைக் காயப்படுத்தியுள்ளது.
கடுமையான உடல் மற்றும் மனக் காயங்கள், பெரும் அதிர்ச்சிகள், அனாதையாக்கப்படுதல், குடும்பப் பிரிப்பு, ஊனம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள், பட்டினி, கல்வி, சுகாதாரக் கட்டமைப்புகளின் வீழ்ச்சி ஆகியவை காசாவில் உள்ள குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை அழித்துவிட்டன; இவை அவர்களின் வாழ்நாள் முழுவதையும் தொடர்ந்து பாதிக்கும்.
பாலஸ்தீனக் குழந்தைகள் கைது செய்யப்பட்டு, இஸ்ரேலிய சிறைகளிலும் தடுப்பு மையங்களிலும் சித்திரவதை மற்றும் பிற கடுமையான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்; மேலும் அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலும் இல்லை.
நீண்டகால, இனரீதியான, பாலின அடிப்படையிலான மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஆக்கிரமிப்பு மற்றும் பகைமையின் ஒரு அங்கமாக, ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்துவதற்கும், ஒடுக்குவதற்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் வன்முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.
.
மேலும், குழந்தைகளுக்கு சேவை செய்த முக்கிய உள்கட்டமைப்புகள் பரவலாகச் சிதைக்கப்பட்டதும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காசாவில் உள்ள பச்சிளங்குழந்தைகள் மற்றும் மகப்பேறு பராமரிப்பு மையங்களை இஸ்ரேல் குறிவைத்திருப்பது, பச்சிளங்குழந்தைகளின் வாழ்வையும், பாலஸ்தீனியர்களின் எதிர்காலத்தையும் நேரடியாகப் பாதித்துள்ளது.
இஸ்ரேல் தனது முற்றுகை மற்றும் தடை உத்தரவுகளால் திணித்த பட்டினியானது, பாலஸ்தீனியக் குழந்தைகளின் இறப்பிற்கு காரணமாகிறது.
இந்த உளவியல்ரீதியான பாதிப்புகள் ஒரே இரவில் சரியாகிவிடாது என்றும், இதன் பாதிப்புகள் தலைமுறை தலைமுறையாக தொடரும் எனவும் ஐ.நா.வேதனை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து சர்வதேச சமூகங்கள் இணைந்து இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும், தவறு செய்தவர்கள் அதற்குப் பொறுப்பேற்பதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவும் கூறியுள்ளது.
ஆனால், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய தூதர் ஆகியோர் இந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.