சர்வதேச ஜனநாயக தினம் 2026: அனைத்து குரல்களும் கேட்கும்போது ஜனநாயகம் சிறக்கும்- ஐ.நா முக்கிய அழைப்பு!

சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களின் பின்னணியில் பல தசாப்தகால சர்வதேச முயற்சிகள் உள்ளன.
International Day of Democracy
Published on
Summary

தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.

உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகள், மனித உரிமைகள் மற்றும் மக்களின் நேரடிப் பங்கேற்பை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ஆம் தேதி இன்று சர்வதேச ஜனநாயக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான ஜனநாயக தின கொண்டாட்டங்கள், உலகின் பல்வேறு நாடுகளின் மக்களிடையேயான கருத்து சுதந்திரத்தையும் வெளிப்படையான நிர்வாகத்தையும் மையமாகக் கொண்டு விரிவாக முன்னெடுக்கப்படுகின்றன.

2026-ஆம் ஆண்டின் மையப்பொருள்

இந்த ஆண்டின் சர்வதேச ஜனநாயக தினத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியக் கருப்பொருள் "அனைத்து குரல்களும் மதிப்பைப் பெறும்போது, ஜனநாயகம் தனது பலனைத் தரும்" (When every voice counts, democracy delivers) என்பதாகும். தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்கள் மற்றும் வாக்களிப்புடன் முடிந்துவிடுவதில்லை என்றும், அது சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய அமைதி, நம்பிக்கை மற்றும் வெளிப்படையான சட்டத்தின் ஆட்சியை உருவாக்குவதில்தான் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களின் பின்னணியில் பல தசாப்தகால சர்வதேச முயற்சிகள் உள்ளன. 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சர்வதேச நாடாளுமன்றங்களின் ஒன்றியம் ஜனநாயகத்தின் உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற புதிய மற்றும் மீட்டெடுக்கப்பட்ட ஜனநாயக நாடுகளின் சர்வதேச மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், கத்தார் நாடு முன்மொழிந்த வரைவுத் தீர்மானத்தை 2007 நவம்பர் 8 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஒருமனதாக நிறைவேற்றியது. இதன் தொடர்ச்சியாக, 2008-ஆம் ஆண்டு முதல் முதன்முறையாக உலகளாவிய அளவில் செப்டம்பர் 15 அன்று சர்வதேச ஜனநாயக தினம் முறையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஐ.நா அமைப்பின் 20-ஆவது ஆண்டு மைல்கல்

இந்த ஆண்டின் ஜனநாயக தினத்தை முன்னிட்டு, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 'ஐக்கிய நாடுகள் ஜனநாயக நிதியம்' மற்றும் 'கூட்டாண்மைக்கான ஐ.நா அலுவலகம்' இணைந்து சிறப்பு மாநாடுகளை நடத்துகின்றன. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் ஜனநாயக நிதியம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவது கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இந்த 20 ஆண்டுகளில், உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவில் சமூகத் திட்டங்கள், பாலின சமத்துவ முயற்சிகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்த நிதி உதவி வழங்கி உள்ளது.

சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியா "ஜனநாயகத்தின் தாய்" என்ற கருத்தாக்கத்தை உலக அளவில் முன்வைத்து வருகிறது. கிராம பஞ்சாயத்துகள் முதல் நாடாளுமன்றம் வரை பல அடுக்குத் தேர்தல் முறைகளைக் கொண்டுள்ள இந்தியாவில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பும் மக்கள் பங்கேற்கும் 'கிராம சபா' கூட்டங்களும் ஜனநாயகத்தின் அடிமட்ட வலிமையைப் பிரதிபலிப்பதாக சர்வதேச அரங்கில் சுட்டிக்காட்டப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com