

இமயமலை அருகே சீனா திபெத் எல்லையில் உருவாகி ஓடும் லெண்டே கோலா நதி, நேபாளத்தில் கோஷி நதியாக பெயர் பெற்று, இந்தியாவுக்குள் கங்கையில் கலக்கிறது.
இந்த லெண்டே கோலா நதியில் கடந்த புதன்கிழமை இமயமலை பனிப்பாறைகள் விழுந்து நீரோட்டத்தை அடைத்ததால் அணை உடைந்தது.
போக வழியின்றி தேங்கியிருந்த தண்ணீர் அணை உடைந்ததால் வேகமாக கீழ் நோக்கி பாய்ந்தது. இதனால் நதியானது கோஷியாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் நுழையும்போது வெள்ளப்பெருக்குக்கு உள்ளானது.
இந்த திடீர் வெள்ளபெருக்கு காரணமாக ரசுவா மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதுவரை இந்த பேரிடரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளது.
2,500 பேர் மாயமாகியுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திபெத்திலும் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திபெத்தில் லெண்டே கொலோ நதி அமைப்பின் மேல் பகுதியில் தற்காலிக ஏரி ஒன்று உருவாகி உள்ளது. அந்த ஏரியில் உள்ள நீரின் நிறம் மாறியுள்ளதை சுட்டிக்காட்டி, அது எந்நேரத்திலும் கரைபுரண்டு பாயக்கூடும் என சீனா எச்சரித்துள்ளது.
கடந்த புதனன்று ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து பனிப்பாறை சரிவு இடிபாடுகளால் நதி நீர் தடைபட்டு இந்த ஏரி உருவாகக் காரணமாக அமைந்தது.
சீனப் பகுதியில் உள்ள 'சோசென்' நதியும், நேபாளப் பகுதியில் உள்ள 'புரேபு' நதியும் இணையும் இடத்திற்கு அருகில் இந்த ஏரி உருவாகியுள்ளது.
இந்த ஏரியின் நிறம் தொடர்ந்து கருமையாக மாறி வருவதாக நேபாள வெளியுறவு அமைச்சகத்துடன் பகிர்ந்த செய்தியில் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஏரி எந்நேரத்திலும் தடுப்பை உடைத்து பாயக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சீன நீர் வள அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, இந்த ஏரியில் சுமார் 25 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளது.
தண்ணீரின் அளவு மிக அதிகமாக இல்லாததால், கீழ்நோக்கிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்கக்கூடும் என்றும், ஆனால் மிகப்பெரிய அளவில் நீர்மட்டம் உயர வாய்ப்பில்லை என்பதையும் சீனா தெரிவித்துள்ளது.
இருப்பினும் கீழ்நோக்கிய பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சீன அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.