யாருடைய ஊதுகுழல் கமல்?: ரசிகர்களை தூண்டி விடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

யாருடைய ஊதுகுழலாக இருந்து நடிகர் கமல் தமிழக அரசின் மீது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாருடைய ஊதுகுழல் கமல்?: ரசிகர்களை தூண்டி விடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் சாடல்
Published on

சென்னை:

நடிகர் கமல்ஹாசன் மற்றும் தமிழக அமைச்சர்கள் இடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் கமல் தெரிவிக்கட்டும் என்று அமைச்சர்கள் கூறி வந்தனர். 

இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் டிஜிட்டல் மூலம் குறைகளை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுமாறு நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், யாருடைய ஊதுகுழலாக இருந்து நடிகர் கமல் தமிழக அரசின் மீது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “இந்தி படங்களில் நடித்து இந்தியின் புகழ் பரப்பிய கமலுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக கமல் கூறி உள்ளார். அவர் கடந்த வரலாற்றை பார்க்கும் பார்க்கும் போது எந்த பிரச்சனைக்காகவும் அவர் பேசவில்லை.

யாருடைய ஊதுகுழலாக இருந்து நடிகர் கமல் அம்மா அரசு மீது சேற்றை வீசி விட்டு ஏன் பதுங்கி கொள்ள வேண்டும். ஸ்டாலின், பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் கமல் ஆகியோர் கூட்டணி சேர்ந்து ஆட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். வேண்டுகோள் விடுப்பதன் மூலம் ரசிகர்களை தூண்டி விடுகிறார்.

அரசியலுக்கு வந்துவிட்டேன் என கூறும் கமல், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட எந்த பிரச்சனைக்காவது குரல் கொடுத்திருக்கிறாரா?. ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு கமல் நிரூபித்தால் நடவடிக்கை எடுப்போம். வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திக்க தயார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com