கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவன முதன்மை செயல்அதிகாரி ராஜினாமா செய்ய காரணம் என்ன?: பரபரப்பு தகவல்கள்

கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவன முதன்மை செயல்அதிகாரி ராஜினாமா செய்ய காரணம் என்ன? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
சுகன்யா
சுகன்யா
Published on

கோவை:

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள ஸ்மார்ட் சிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. ராஜூவின் மகள் சுகன்யா கடந்த 11-ந்தேதி நியமிக்கப்பட்டார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சுகன்யா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயனிடம் கொடுத்தார். அதை கமி‌ஷனர் ஏற்றுக்கொண்டார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் நிலையில் அரசியல் காரணங்களுக்காக அனுபவம் இல்லாத ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் சுகன்யா நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக கூறி அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் நேர்காணலில் கலந்து கொண்ட 17 பேரில் சுகன்யா மட்டுமே தகுதி உள்ளவராக இருந்ததாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேநேரம் சுகன்யாவை பணி நீக்கம் செய்து, முறையாக நேர்காணல் நடத்த வேண்டும் என்று கூறிய தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போராட்டங்களையும் நடத்தினர். இதனால் சுகன்யா மனஉளைச்சலுக்கு ஆளானார். இதையே தனது ராஜினாமா கடிதத்திலும் அவர் தெரிவித்துள்ளார்.

தகுதி இருந்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்படுவதாக கூறிய அவர் தேவையில்லாத விமர்சனங்களால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே இப்பணியில் மேற்கொண்டு தொடர விரும்பவில்லை என ராஜினாமா கடிதத்தில் கூறி உள்ளார்.

சுகன்யாவின் ராஜினாமா கோவை ஸ்மார்ட்டி சிட்டி நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதிய முதன்மை செயல்அதிகாரி நியமிக்கப்படும் வரை மாநகராட்சி கமி‌ஷனர் கூடுதலாக கவனித்துக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com