

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் உள்ள நந்தாதேவி பனிமலை இன்று திடீரென உடைந்துள்ளது. ரேனி கிராமத்தில் ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகியதால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் ஆற்றின் கரையோரம் இருந்த கட்டடங்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்ததும் உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு அவர் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் டேராடூன் திரும்பிய அவர், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் அவர் கூறுகையில் ‘‘பனிமலை உருகியதற்கான காரணத்தை வல்லுநர்களால்தான் கூற முடியும். ஆனால், எங்களது அரசு தற்போது மக்களை காப்பாற்றுவதில்தான் கவனம் செலுத்துகிறது.
180 ஆடு, மாடுகளுடன் கால்நடைகள் மேய்க்கும் நபர்கள் உள்பட ஐந்து பேர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுமார் 125 பேர் மாயமாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பனி மற்றும் பனிச்சரிவு வல்லுநர்கள் பிரிவு பாதுகாப்புதுறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை சம்பவ இடத்திற்கு வந்தடையும். அவர்கள் சூழ்நிலையை மதிப்பிடுவார்கள்.
இந்திய ராணுவம் சம்பவ இடத்தை அடைந்துள்ளது. 60 பேரை கொண்ட எஸ்டிஆர்எஃப் குழு மீட்புப் சாதனங்களுடன் இடத்திற்கு சென்றுள்ளது’’ என்றார்.
இதற்கிடையில் நீர்மின் நிலையத்தில் வேலைப்பார்த்த 16 பேர் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை இந்தோ-திபெத் எல்லை போலீசார் மீட்டனர்.